கால் பாதத்தில் ஏற்பட்ட தீவிர காயம் காரணமாக இனி வரும் உலகக் கோப்பை ஆட்டங்களில் இருந்து விலகினார் இந்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர். அவருக்கு பதிலாக இளம் வீரர் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
செளதாம்ப்டனில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் விஜய் சங்கரின் பாதத்தில் காயம் பட்டிருந்தது. ஆனால் அதுகுறித்து பெரிதாக எந்த பாதிப்பும் இல்லாத நிலையில் தொடர்ந்து ஆடி வந்தார் அவர். ஆனால் தற்போது மருத்துவ பரிசோதனையில் இடதுகால் பாதத்தில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரிந்தது. இது குணமடைய 3 வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் விஜய் சங்கர் அடுத்து வரும் ஆட்டங்களில் எதிலும் பங்கேற்க முடியாது.
மயங்க் அகர்வால் சேர்ப்பு: அவருக்கு பதிலாக கர்நாடக மாநில தொடக்க வீரர் மயங்க் அகர்வாலை அணியில் சேர்க்க ஐசிசிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆஸி. டெஸ்ட் தொடரில் மயங்க் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் ஒருநாள் ஆட்டம் எதிலும் ஆடவில்லை.
மேலும் இங்கிலாந்துக்கு ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரில் இந்திய ஏ அணியில் இடம் பெற்ற மயங்க் சிறப்பாக ஆடினார். அதைக் கருத்தில் கொண்டு தற்போது இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டால், தனது வழக்கமான நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்தில் லோகேஷ் ராகுல் களமிறங்கலாம்.
ஆப்கானிஸ்தானுடன் 29, மே.இ.தீவுகளுடன் 16 ரன்களை எடுத்த விஜய் சங்கர், பாகிஸ்தானுக்கு எதிராக 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.