என்னுடைய கையெழுத்தை திருட்டுத்தனமாக போட்டு ரூ. 4.5 கோடி கடனை மோசடி செய்துள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார்.
விரேந்திர சேவாக்கின் மனைவி ஆர்த்தி சேவாக், 8 பேருடன் இணைந்து தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கூட்டாளிகளாக இருக்கும் மற்றவர்கள் ஆர்த்தியின் கணவர் சேவாக் பெயரை பயன்படுத்தி தில்லியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ 4.5 கோடி கடன் பெற்றுள்ளனர். இதையடுத்து, இதுதொடர்பாக ஆர்த்தியின் கவனம் இல்லாமல் முத்தரப்பு ஒப்பந்தத்தில் அவரது கையெழுத்தை திருட்டுத்தனமாக போட்டுள்ளனர். மேலும், பிந்தைய தேதிகளை இட்டு இரண்டு காசோலைகளையும் அவர்கள் வழங்கியுள்ளனர்.
ஆனால், அந்த நிறுவனமானது வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தவில்லை. இதனால், கடன் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, இதுதொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தையும், கையெழுத்தையும் பார்த்து ஆர்த்தி சேவாக் அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, ஆர்த்தி சேவாக் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இந்திய தண்டனையியல் சட்டம் 420, 468, 471 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.