கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜாக் காலிஸும் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சைமன் கடிச்சும் சமீபத்தில் விலகினார்கள்.
இந்நிலையில் கேகேஆர் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ்ஸும் ஆலோசகராக பிரண்டன் மெக்கல்லமும் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரெவர் பேலிஸ், சமீபத்தில் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஆஷஸ் தொடருக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நீடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.
பேலிஸ், மெக்கல்லம் ஆகிய இருவருக்கும் கேகேஆர் அணி புதிதல்ல. 2012 முதல் 2014 வரை கெளதம் கம்பீர் தலைமையில் கேகேஆர் அணி இருமுறை ஐபிஎல் போட்டியை வென்றபோது பேலிஸ், கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். மெக்கல்லம், கேகேஆர் அணிக்காக 5 வருடங்கள் விளையாடியுள்ளார். 2009-ல் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
இருவருடைய நியமனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.