காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் முன்னேறியுள்ளன.
கட்டாக்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெற்ற சூப்பர் 8 பிரிவு ஆட்டங்களில்
ஆடவர் பிரிவில் இலங்கை, மலேசிய அணிகளை 3-0 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜி.சத்யன், சரத்கமல், அந்தோணி அமல்ராஜ், மானவ் தாக்கர், ஆகியோர் வெற்றியில் பங்கு வகித்தனர்.
மகளிர் பிரிவில் இந்திய அணி வேல்ஸ், மலேசியா, நைஜீரியாவை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அர்ச்சனா, மனிகா பத்ரா, மதுரிகா பட்கர், சுதிர்தா முகர்ஜி, அஹிகா முகர்ஜி ஆகியோர் மகளிர் அணி வெற்றிக்கு வழிவகுத்தனர்.
அதே போல் இங்கிலாந்து ஆடவர், மகளிர் அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அந்நாட்டு ஆடவர் 3-2 என சிங்கப்பூரையும், ஆஸி.யை 3-1 எனவும் வென்றனர். மகளிர் அணி ஆஸி.யை 3-1, இலங்கையை 3-0 என வீழ்த்தினர்.
தனிநபர் பிரிவில் ஜி.சத்யன், மனிகா பத்ரா முதல்நிலை வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.