இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார்.ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் மகளிர் பிரிவு அரை இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனை சீனாவின் சென் யுபெயை எதிர்கொண்ட சிந்து 21-19, 21-10 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். சென் யுபெய் ஏற்கெனவே இந்த ஆண்டு ஆஸி, ஸ்விஸ், ஆல் இங்கிலாந்து போட்டிகளில் வென்றிருந்தார்.
இது இந்த ஆண்டில் இறுதிச்சுற்றுக்கு சிந்து தகுதி பெறும் முதல் போட்டியாகும். ஏற்கெனவே சிங்கப்பூர் மற்றும் இந்திய ஓபன் போட்டி அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்தார்.
எமகுச்சியுடன் மோதல்: இறுதிச் சுற்றில் 4-ஆம் நிலை வீராங்கனையையும், ஜப்பானைச் சேர்ந்தவருமான அகேன் எமகுச்சியை எதிர்கொள்கிறார்.
ரஷிய ஓபன் போட்டி: ரஷிய ஓபன் போட்டி அரையிறுதியில் இந்திய இரட்டையர் இணை மேக்னா ஜக்கம்புடி, பூர்விஷா, மேக்னா-கபிலா தோல்வியுற்று வெளியேறினர்.