செக்.குடியரசின் பிராக் நகரில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில் 400 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய நட்சத்திரம் ஹிமா தாஸ், ஓரே மாதத்தில் 5-ஆவது தங்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
பி.டி. உஷாவுக்கு அடுத்து தடகள ஓட்டப்பந்தயத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருபவர் அஸ்ஸாமின் இளம் வீராங்கனை ஹிமா தாஸ். பிராகில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 400 மீ ஓட்டத்தில் 52.09 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். தபோர் போட்டியில் 200 மீ.இல் தங்கம் வென்றார்.
மேலும் கிளாட்னோ போட்டி, குண்டோ தடகளப் போட்டி, போன்ஸான் தடகள கிராண்ட்ப்ரீ என சர்வதேச போட்டிகளில் மொத்தம் 5 தங்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், ஹிமா தாஸ் வெளியிட்ட விடியோப் பதிவில் கூறியதாவது:
சர்வதேசப் போட்டிகளில் 5 தங்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் எனது ஆட்டத்திறனை மேம்படுத்திக்கொண்டு வருகிறேன். உலக சாம்பியன்ஷிப் தொடரில் சாதிப்பது தான் எனது இலக்கு. அதற்காக தயாராகும் விதமாக இப்போட்டிகளை நான் பயன்படுத்திக்கொள்கிறேன்.
நான் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு, மேலும் பல சாதனைகளைப் படைக்க உங்கள் அனைவரின் அன்பும், ஆதரவும், ஆசிர்வாதமும் தேவை. என்னை தொடர்ந்து வாழ்த்துங்கள் என்று தெரிவித்தார்.