அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் வீரர்களுக்கான ஏலத்தில் சென்னை அணி சரத் கமலையும், கொல்கத்தா அணி மனிகா பத்ராவையும் தேர்வு செய்தன.
ஏனைய விளையாட்டுகளில் நடைபெறும் லீக் போட்டிகளைப் போல், டேபிள் டென்னிஸிலும் லீக் போட்டி நடக்கிறது. இதன் மூன்றாவது சீசன் ஆட்டம் புது தில்லியில் வரும் ஜூலை 25-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த சீசனில் புதிதாக இணைந்துள்ள சென்னை லயன்ஸ் அணி 9 முறை தேசிய சாம்பியன் சரத் கமலை தேர்வு செய்துள்ளது. அதே நேரத்தில் மகளிர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை மனிகா பத்ராவை கொல்கத்தா ஆர்பி-எஸ்ஜி மாவேரிக்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.
மேலும் இரண்டு புதிய அணிகளாக யு மும்பா டிடி, புணேரி பல்தான் டேபிள் டென்னிஸ் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
தபாங் தில்லி அணியில் சத்தியன் ஞானசேகரன் தக்க வைக்கப்பட்டுள்ளார். மனுஷ்ஷா (கொல்கத்தா), ஹாங்காங் வீரர் டூ ஹோய் கெம் (யு மும்பா), ஜெர்மன் வீராங்கனை பெட்ரிஸா சொலிஜா , டியாகோ அபோலோனியா (சென்னை) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.