2019 ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு பாக் வீரர்கள் தயாராக வேண்டும் என அதன் கேப்டன் சர்பராஸ் அகமது கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இதற்கிடையே இந்தியாவுடன் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஓல்ட் டிராஃப்போர்டில் பாகிஸ்தான் ஆடுகிறது.
கடந்த 1992-இல் இருந்து நடைபெற்ற 6 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஒருமுறை கூட இந்தியாவை வென்றதில்லை பாகிஸ்தான்.
கேப்டன் சர்பராஸ் கூறியதாவது: பெரிய அணிகளான ஆஸி., இந்தியாவை வெல்ல வேண்டும் என்றால் பீல்டிங், பவுலிங்கை மேம்படுத்த வேண்டும். பீல்டிங் மிக மோசமாக உள்ளது. ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் 3 கேட்சுகளை தவற விட்டும், பீல்டிங்கில் கோட்டை விட்டதாலும் தோல்வியைத் தழுவினோம். ஆஸி.யை விட அதிக தவறுகள் செய்தோம். முதல் 30 ஓவர்களில் ஒழுங்காக பந்துவீசவில்லை. 15 பந்துகளில் 3 விக்கெட்டை இழந்தது திருப்புமுனையாகி விட்டது. இந்தியா வலிமையான அணி ஆனதால் அதற்கான உத்தியை வகுக்க வேண்டும் என்றார் சர்பராஸ்.