2011 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் ஷர்மா இந்திய அணியில் இடம்பெறாதது தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக அவருடைய சிறு வயதுப் பயிற்சியாளர் தினேஷ் லேட் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
சிறு வயதில் இருந்து நான் ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தைப் பார்த்து வருகிறேன். இதுவரை அதில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதென்றால், அனுபவம் காரணமாக அவரது ஆட்டத்தில் முதிர்ச்சி தோன்றியுள்ளது.
2007 முதல் 2009 வரை ரோஹித் சிறப்பாக செயல்பட்டாலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மட்டுமே 2 சதங்கள் எடுத்திருந்தார். ஆனால், 2009 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் பணம் மற்றும் புகழ் காரணமாக ஆட்டத்தில் கவனம் செலுத்தாமல் தடம் மாறினார்.
அதனால் 2011 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை. அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனவே நான் ரோஹித்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். பணம், புகழ் எல்லாம் கிடைத்துவிட்டது. ஆனால், ஆட்டம் எங்கே போனது, உனக்கு பின்னால் அறிமுகமான விராட் கோலி இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று கேள்வி எழுப்பினேன்.
எனவே இனியாவது ஆட்டத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி, கடுமையாகப் பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்தினேன். அப்போது முதல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை கடுமையாகப் பயிற்சி செய்தார். அக்காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெறுவதும் ரோஹித்துக்கு சவாலாக இருந்தது. ஆனால், அது ரோஹித் கிரிக்கெட் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.
ஏனென்றால் தனது ஆதர்ஸ நாயகனான சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. கிரிக்கெட் மீதான சச்சினின் அர்ப்பணிப்பும், ஒழுக்கமும் ரோஹித் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று தெரிவித்தார்.