ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததற்கு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
மகேந்திர சிங் தோனி-கேதார் ஜாதவ் இணை மிடில் ஆர்டரில் எந்த உத்வேகமோ, அல்லது நோக்கோ இல்லாமல் ஆடியது. அவர்கள் மேலும் சிறப்பாக ஆடியிருக்கலாம். 34 ஓவர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு 119 ரன்களை மட்டுமே சேர்த்தனர். அந்த அம்சத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தோனி 24, (36 பந்துகள்), ஜாதவ் 31 (48 பந்துகள்) இணைந்து
5-ஆவது விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்தனர். இதனால் அணியின் ரன் குவிப்பு குறைந்து விட்டது. கோலி 38-ஆவது ஓவரில் அவுட்டான பின், 45-ஆவது ஓவர் வரை அதிக ரன்களை சேர்க்கவில்லை. கோலி 67 ரன்களை எடுத்திருந்தாலும், முதன்முறையாக தொடக்க வரிசை சரியாக ஆடவில்லை.
ஜாதவுக்கு பதிலாக தோனியே ரன் குவிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கலாம் என்றார்.