இலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 39.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து 189 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இசுரு உடானா 4 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 57 பந்துகளில் 78 ரன்களை விளாசினார். மேலும் அவிஷ்கா பெர்ணான்டோ 29, குஸால் மெண்டிஸ் 21, தனஞ்செய டி சில்வா 22 தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அன்ரிச் நார்ட்ஜெ 3-57 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 32.5 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டுமே இழந்து 190 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
குயிண்டன் டி காக் 51, டுபிளெஸிஸ் 43 ரன்களை விளாசினர். டேவிட் மில்லர் 33, ஜீன் பால் டும்னி 31 ஆகியோர் இறுதி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் தனஞ்செயடி சில்வா 3-41 விக்கெட்டை சாய்த்தார்.
ஏற்கெனவே டெஸ்ட் தொடரை 2-0 தென்னாப்பிரிக்கா வென்றிருந்தது. தற்போது ஒருநாள் தொடரிலும் 4-0 என முன்னிலை பெற்றுள்ளது.