தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக கங்குலி நியமனம்

ஐபிஎல் அணிகளில் ஒன்றான தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக கங்குலி நியமனம்


ஐபிஎல் அணிகளில் ஒன்றான தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
தில்லி டேர்டெவில்ஸ் என அழைக்கப்பட்டு வந்த அணியின் பெயர், தற்போதைய சீசனுக்காக தில்லி கேபிடல்ஸ் என மாற்றப்பட்டுள்ளது. அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார். இந்நிலையில் அணியின் ஆலோசகராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக கங்குலி கூறியதாவது: இந்த நியமனம் மகிழ்ச்சி தருகிறது. அந்த அணியின் உரிமையாளர்களை பல காலமாக அறிவேன். அணி வீரர்கள், அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன் என்றார்.
தில்லி அணியின் சேர்மன் பார்த் ஜிண்டால் கூறுகையில்: உலக கிரிக்கெட்டில் செளரவ் கங்குலி பெயரும் அனைவரது மனங்களில் நிலைத்துள்ளது. மைதானத்தில் ஆக்ரோஷம், நம்பிக்கை, சளைக்காத தன்மை போன்றவற்றை கொண்டவர். அவரது ஆலோசனை தில்லி அணிக்கு மிகுந்த பயன் தரும் என்றார்.
தில்லி அணி வரும் 24-ஆம் தேதி வாங்கடே மைதானத்தில் நடக்கவுள் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது.  சொந்த மைதானத்தில் முதல் ஆட்டமாக 26-ஆம் தேதி நடப்பு சாம்பியன் சென்னையுடன் ஆடுகிறது தில்லி.
இதற்கிடையே பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராகவும் கங்குலி உள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் ஆலோசகர் பதவிக்கும் நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆதாயம் தரும் இரட்டை பதவியை வகிப்பதாக பிரச்னை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கங்குலி கூறுகையில்: பிசிசிஐ சிஓஏவிடம் இதுகுறித்து விளக்கி உள்ளேன். அதன் பின் தான் இந்த பதவியை ஏற்றேன். ஐபிஎல் ஆட்சிக்குழுவில் இருந்து நான் விலகி விட்டேன். இதில் எந்த ஆதாயமும் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com