மகளிர் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை முழுமையாக வென்றது இங்கிலாந்து

மகளிர் கிரிக்கெட் போட்டியில் 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து.
வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீராங்கனைகள்.
வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீராங்கனைகள்.


மகளிர் கிரிக்கெட் போட்டியில் 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, கடந்த 16ஆம் தேதி முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடியது.
அதில், டக்வொர்த் லீவிஸ் முறையில் 154 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
கடந்த திங்கள்கிழமை ஹம்பன்தோடாவில் நடைபெற்ற 2ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது அந்த அணி. ஆறுதல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. கதுனாயகே நகரில் வியாழக்கிழமை டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்ஷிதா மாதவி 72 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற் ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே அதிரடி ஜாலம் நிகழ்த்தியது.
தொடக்க வீராங்கனையான எமி எலன் ஜோன்ஸ், டாமி பியாமன்ட் ஆகியோர் அரை சதம் பதிவு செய்து ஆட்டமிழந்தனர்.
பின்னர், களம் இறங்கிய லாரன் வின்ஃபீல்ட், கேப்டன் ஹெதர் நைட் ஆகியோர் அணியை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றனர். 26.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து அந்த அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு நகரில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com