கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரும், தொழிலதிபருமான நெஸ் வாடியா சிறை தண்டனை விதிக்கப் பெற்ற விவகாரம் தொடர்பாக பிசிசிஐ அமைப்பின் கிரிக்கெட் நிர்வாகக் குழு (சிஓஏ) மும்பையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளது.
ஜப்பான் விமான நிலையத்தில் 25 கிராம் போதைப் பொருளுடன் அதிகாரிகளிடம் பிடிபட்டார் நெஸ் வாடியா. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம் தண்டனையை 5 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின்படி, அணி நிர்வாகத்துடன் தொடர்புடைய எந்த நபர்களும் அணியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட அணிக்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதற்கு முன்பு ஸ்பாட்ஃபிக்ஸிங் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக சிஓஏ ஆலோசனை நடத்தவுள்ளது. இதனை பிசிசிஐ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.