கோவையில் 2ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான 16 வயதுக்கு உள்பட்டோருக்கான இளையோர் தேசிய கூடைப்பந்து போட்டிகளில் தமிழ்நாடு, கேரளம் அணிகள் வெற்றி பெற்றன.
இந்தியக் கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் ஆகியவற்றின் சார்பில் இளையோர் கூடைப்பந்துப் போட்டிகள் கோவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
இரண்டாவது நாள் ஆட்டங்கள் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றன.
இதில், ஆடவர் பிரிவு முதல் லீக் ஆட்டத்தில், ஆந்திரம் - ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின. ஆந்திர அணி 84-38 என்ற புள்ளிக் கணக்கில் ஜம்மு காஷ்மீரை வீழ்த்தியது. 2ஆவது ஆட்டத்தில் மத்தியப் பிரதேச அணி 73 -65 என்ற புள்ளிகள் கணக்கில் தில்லியை வீழ்த்தியது. 3ஆவது ஆட்டத்தில் ஒடிஸா அணி 66-63 என்ற புள்ளிகள் கணக்கில் போராடி அஸ்ஸாமை வீழ்த்தியது. 4ஆவது ஆட்டத்தில் பிகார் அணி 63-50 என்ற புள்ளிகள் கணக்கில் புதுச்சேரி அணியை வென்றது.
5ஆவது ஆட்டத்தில் உத்தரகண்ட் அணி 70-34 புள்ளிகள் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 6ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் 65-63 என்ற புள்ளிகள் கணக்கில் கர்நாடகத்தை வீழ்த்தியது. 7ஆவது ஆட்டத்தில் சண்டீகர் அணி 92-38 என்ற புள்ளிகள் கணக்கில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 8ஆவது ஆட்டத்தில் குஜராத் அணி 68 - 34 என்ற புள்ளிகள் கணக்கில் ஹிமாசலப் பிரதேசம் அணியை வீழ்த்தியது.
மகளிர் பிரிவு முதல் ஆட்டத்தில் கர்நாடக அணி 56-21 என்ற புள்ளிகள் கணக்கில் மத்தியப் பிரதேசத்தையும், குஜராத் அணி 52-18 என்ற புள்ளிகள் கணக்கில் ஹிமாசலப் பிரதேச அணியையும் வீழ்த்தின. தில்லி அணி 78-72 என்ற புள்ளிகள் கணக்கில் சத்தீஸ்கரையும், சண்டீகர் அணி 68 -36 என்ற புள்ளிகள் கணக்கில் ஜார்க்கண்ட் அணியையும், கேரள அணி 76-75 என்ற புள்ளிகள் கணக்கில் பஞ்சாப் அணியையும் வீழ்த்தின.
தமிழ்நாடு அணி 68-50 என்ற புள்ளிகள் கணக்கில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. பிகார் அணி 55-52 என்ற புள்ளிகள் கணக்கில் ஜம்மு-காஷ்மீரை வீழ்த்தியது. மூன்றாவது நாள் ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெறுகின்றன.