நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு, பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவதில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக மத்திய அரசுடன் மே 23-ஆம் தேதிக்கு பின் இந்திய ஒலிம்பிக் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் என அதன் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா கூறியுள்ளார். புல்வாமா தாக்குதல் எதிரொலியாக பாக். விளையாட்டு வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு அனுமதி தரவில்லை. இதன் எதிரொலியாக சர்வதேச ஆட்டங்களை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
வரும் 2023-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கான பந்தயத்தில் இருந்து தென் கொரியா விலகிய நிலையில்,
சீனா அப்போட்டியை நடத்துவது உறுதியாகி உள்ளது. அதே ஆண்டில் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டியை வடகொரியாவுடன் இணைந்து நடத்த விரும்புவதால், இதில் இருந்து விலகுவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
ஹைதராபாதில் நடைபெற்ற மும்பை-சென்னை இடையிலான ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் வெற்றிக் கோப்பையை சிஓஏ உறுப்பினர் டையானா எடுல்ஜி வழங்க விரும்பிய நிலையில், பிசிசிஐ தலைவர் தான் மரபின்படி வழங்க வேண்டும் எனக்கூறப்பட்டது. இதனால் சிகே. கன்னா கோப்பையை மும்பை அணிக்கு வழங்கினார். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிசிசிஐ தலைவர் கன்னா மரபை அவமதித்து பரிசளிக்கவில்லை என எடுல்ஜி சாடியுள்ளார்.
ஐஎஸ்எல் சாம்பியன் பெங்களூரு எஃப்சி அணி கால்பந்து அணியின் விங்கர் கீன் லெவிஸை மேலும் ஒரு சீசனுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் 2019-20 ஆண்டு வரை லெவிஸ் பங்கேற்று ஆட உள்ளார்.
உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியின் நான்காம் நிலை பேட்ஸ்மேன் இடத்தில் லோகேஷ் ராகுலை களமிறக்கலாம் என முன்னாள் கேப்டன் திலீப் வெங்சர்க்கார் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நிலவும் மைதான, தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப ஆடக்கூடிய திறன் பெற்றவர் ராகுல் எனவும் பாராட்டியுள்ளார்.