என் சகோதரி என்னைத் தாக்கி பணம் கேட்டு மிரட்டுகிறார்: ஓரினச் சேர்க்கையாளராக  அறிவித்த ஓட்டப்பந்தய வீராங்கனை பேட்டி  

என் சகோதரி என்னைத் தாக்கி ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டுகிறார் என்று தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் தெரிவித்துள்ளார்.
என் சகோதரி என்னைத் தாக்கி பணம் கேட்டு மிரட்டுகிறார்: ஓரினச் சேர்க்கையாளராக  அறிவித்த ஓட்டப்பந்தய வீராங்கனை பேட்டி  

புபனேஷ்வர்: என் சகோதரி என்னைத் தாக்கி ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டுகிறார் என்று தான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்த ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த் தெரிவித்துள்ளார்.

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் துத்தி சந்த். பிரபல ஓட்டப்பந்தய வீராங்கனையான இவர் இந்தியா சார்பாக 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 100 மீ மற்றும் 200 மீ போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்.

தற்போது அவர் சர்வதேச தடகளப் போட்டிகளுக்கும், அது முடிந்த பின்னர் 2020-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தயாராகி வருகிறார்.

இந்நிலையில் நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன் என்று துத்தி சந்த் வெளிப்படையாக கடந்த ஞாயிறன்று அறிவித்தார்.

இதுதொடர்பாக ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளவது:

எனக்கு ஆத்ம துணையாக இருக்கக்கூடிய ஒருவரை நான் கண்டடைந்துள்ளேன். ஒடிஷா மாநிலத்தில் எனது சொந்த ஊரான சக்கா கோபாலபுரில் உள்ள ஒரு பெண்ணை நான் விரும்புகிறேன். ஒவ்வொருவரும் தாங்கள் யாரை விரும்புகிறார்களோ, அவர்களுடன் வாழவதற்கான சுதநதிரம் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். தன் பாலின உறவை மேற்கொள்வோர்களின்  உரிமைகளை எப்போதுமே நான் ஆதரித்து வந்துள்ளேன். அது தனிப்பட்ட ஒருவரின் உரிமையாகும்.

தற்போது என்னுடைய குறிக்கோள் எல்லாம் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளிலும்தான் உள்ளது.  ஆனால் நான் இறுதியாக அவளுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன்.        

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் என் சகோதரி என்னைத் தாக்கி ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டுகிறார் என்று துத்தி சந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புபனேஷ்வரில் செய்தியாளர்களிடம் செவ்வாயன்று பேசிய அவர் கூறியதாவது:

எனது சொந்த சகோதரி சரஸ்வதி என்னை மிரட்டுகிறார். என்னிடம் ரூ.25 லட்சம் கேட்டார். ஒரு முறை அவர் என்னை அடித்து துன்புறுத்தினார். இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளேன். அவர் என்னை மிரட்டியதன் காரணமாகவே எனது உறவு குறித்து வெளியே கூற  நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவரது சகோதரி சரஸ்வதி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,   'துத்தியின் காதலியான அந்தப் பெண் குடும்பத்தினர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தந்த அழுத்தம் காரணமாகவே துத்தி இதுகுறித்து வெளியே கூறியுள்ளார். அவரது சொத்துக்களை அபகரிக்கவே இப்படி அவர்கள் செயல்படுகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com