அகில இந்திய ஹாக்கி: அரையிறுதியில் பெங்களூரு, சென்னை அணிகள்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 11ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின் 8ஆம் நாளான வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அரையிறுதிக்கு பெங்களூரு, சென்னை, மும்பை ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.
கோவில்பட்டி செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற காலிறுதி முதல் ஆட்டத்தில் புவனேஸ்வர் கிழக்குக் கடற்கரை ரயில்வே அணியும், பெங்களூரு ஹாக்கி அசோஸியேஷன் அணியும் மோதின. இதில், 5-க்கு 3 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஹாக்கி அசோஸியேஷன் அணி வென்று, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் சென்னை தெற்கு ரயில்வே அணியும், சென்னை ஐ.சி.எஃப். அணியும் மோதின. இதில், 5-க்கு 4 என்ற கோல்கணக்கில் சென்னை ஐ.சி.எஃப். அணி வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
மற்றொரு காலிறுதிப் போட்டியில், மும்பை அகில இந்திய கஸ்டம்ஸ் மற்றும் சரக்கு சேவை வரி அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதின. இதில், 10-க்கு 9 என்ற கோல் கணக்கில் மும்பை அகில இந்திய கஸ்டம்ஸ் மற்றும் சரக்கு சேவை வரி அணி வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
மற்றொரு காலிறுதிப் போட்டியில், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், மும்பை யூனியன் வங்கி அணியும் மோதின.
சனிக்கிழமை (மே 25) மாலை 5.30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் பெங்களூரு ஹாக்கி அசோஸியேஷன் அணியும், சென்னை ஐ.சி.எஃப். அணியும் மோதுகின்றன.