உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, 5ஆவது பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட வேண்டும் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
தனியார் கிரிக்கெட் செய்தி இணையதளத்துக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:
உலகக் கோப்பை போட்டியில் 5ஆவது பேட்ஸ்மேனாக தோனி களம் இறங்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. பேட்டிங் வரிசை எப்படி இருக்கும் என்பது எனக்கு இன்னும் தெரியாது. ரோஹித் சர்மாவும், ஷிகார் தவணும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்கப்பட்டால், விராட் கோலி 3ஆவதாக இறங்குவார். நான்காவதாக வேறொரு வீரரை களமிறக்கலாம். ஐந்தாவது பேட்ஸ்மேனாக தோனி களமிறக்கப்பட வேண்டும்.
ஹார்திக் பாண்டியா அதிரடி ஆட்டக்காரர் என்பதால், தோனியுடன் இவர் இணைந்தால் சிறப்பாக இருக்கும். ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட முடியும் என்றார்.
தவன், ரோஹித் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "இடதுகை ஆட்டக்காரரும், வலதுகை ஆட்டக்காரரும் களமிறக்கப்படும்போது பந்துவீச்சாளர்களுக்கு ஃபீல்டர்களை நிறுத்துவதில் சங்கடம் ஏற்படும். இருவரது இணையும் சிறப்பாக அமைந்துவிட்டால், எதிரணிக்கு ரன்களைக் கட்டுப்படுத்துவது கடினம். இதுபோன்ற பாணியை பின்பற்றுவது அவசியம்.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கிறேன். அரையிறுதிக்கு செல்லும் 4ஆவது அணியாக பாகிஸ்தானோ அல்லது நியூஸிலாந்து அணியோ இருக்க வாய்ப்புள்ளது' என்று பதிலளித்தார் சச்சின்.
உலகக் கோப்பை வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜூன் 5ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா விளையாடவுள்ளது.