உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில், பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கன்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் சேர்த்தது. பாபர் ஆஸாம் 108 பந்துகளில் 112 ரன்கள் பதிவு செய்தார்.
ஷோயப் மாலிக் 44 ரன்களும், இமாம்-உல்-ஹக் 32 ரன்களும் எடுத்தனர். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆப்கன் அணியில் அதிகபட்சமாக முகமது நபி 10 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 9 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார். தவ்லத் ஸத்ரன் 2 விக்கெட்டுகளையும், ஹமீத் ஹசன், அஃப்தப் ஆலம் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கன், 49.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக அந்த அணியில் ஷாஹிதி 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனிடையே, இங்கிலாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இலங்கையும், தென்னாப்பிரிக்காவும் மோதின. இதில், முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்தது.
339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை, 42.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 251 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. கேப்டன் திமுத் கருணாரத்னே அதிகபட்சமாக 87 ரன்களும், ஏஞ்சலோ மாத்யூஸ் 64 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்காவின் பெலுக்வாயோ 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.