கனடாவில் ஏற்பட்ட விபத்தில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா மரணமடைந்ததாகத் தவறான செய்தி ஒன்று இணையத்தளத்தில் வெளியானது.
இதை உடனடியாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுத்தார் ஜெயசூர்யா. என்னுடைய உடல்நலன் குறித்து தவறான செய்திகள் வெளியிட்ட இணையத்தளங்களைப் பொருட்படுத்த வேண்டாம். நான் இலங்கையில் உள்ளேன். சமீபகாலமாக கனடாவுக்குச் செல்லவில்லை. வதந்தியைப் பகிரவேண்டாம் என்று வேண்டுகோளுடன் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வதந்தி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வியெழுப்பியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின். சனத் ஜெயசூர்யா குறித்த செய்தி உண்மையா? இதுகுறித்து வாட்சப்பில் எனக்குச் செய்தி வருகிறது. ஆனால் ட்விட்டரில் அதுபற்றி ஒன்றும் இல்லையே என்று கேள்வியெழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த ரசிகர்கள், அந்தச் செய்தி தவறு என்று அஸ்வினுக்கு உண்மையைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.