ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா.
கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் உலக சாதனையுடன் தங்கம் வென்று சாதனை படைத்தார் அபூர்வி. தற்போது மீண்டும் தங்கம் வென்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்த அபூர்வி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில் 251 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். சீன வீராங்கனை வாங் லுயாவ் 250.8 புள்ளிகள் பெற்றி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மற்றொரு சீன வீராங்கனை ஜூ ஹாங் 229.4 புள்ளிகள் பெற்று 3ஆவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.
இதே பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன், 0.1 புள்ளி வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை இழந்து 4ஆவது இடத்தையும், அஞ்சும் முட்கில் 11ஆவது இடத்தையும் பிடித்தனர்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் அபூர்வி வென்ற நான்காவது பதக்கம் இதுவாகும். 2015இல் இதே முனிச் நகரில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் வெள்ளி வென்றார். அதே ஆண்டு தென்கொரியாவின் சங்வான் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார்.