வங்கதேசத்துடனான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் செய்த ஸ்டம்பிங்குக்கு 3-வது நடுவர் நாட் அவுட் கொடுத்தது சர்ச்சையாகியுள்ளது.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் ராஜ்கோட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
அந்த அணிக்கு லிட்டன் தாஸ் மற்றும் முகமது நயிம் நல்ல தொடக்கத்தைத் தந்தனர். இதனால் முதல் 5 ஓவரில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்தது. இந்த சூழலில் ரோஹித் சர்மா சாஹலை அறிமுகப்படுத்தினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் சாஹலின் அற்புதமான சுழலால் லிட்டன் தாஸை ரிஷப் பந்த் ஸ்டம்பிங் செய்தார். இது விக்கெட் என வெளிப்படையாக தெரிந்தபோதிலும் ரீ-பிளேவில் 3-வது நடுவர் ஆய்வு செய்தார்.
அதில், பந்து ஸ்டம்புகளைக் கடப்பதற்கு முன்பாகவே ரிஷப் பந்த் பிடித்து ஸ்டம்பிங் செய்தது தெரியவந்தது.
கிரிக்கெட் விதிப்படி, பேட்ஸ்மேன்களின் பேட்டில் பந்து படாதபோது, ஸ்டம்புகளைக் கடப்பதற்கு முன் கீப்பர் பந்தை பிடிக்கக் கூடாது.
பந்த் செய்த இந்த மிகச் சிறிய தவறால், அது நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதனால், லிட்டன் தாஸின் ஸ்டம்பிங்கும் கணக்கில் கொள்ளப்படவில்லை. இதன்மூலம், அவருக்கு ஒரு வாய்ப்பும் கிடைத்தது.
ரிஷப் பந்தின் இந்த சிறிய தவறால், அவர் மீண்டும் விமரிசனத்துக்குள்ளாகியுள்ளார். முன்னதாக, முதல் டி20யில் தவறான ரிவியுவால் அவர் சமூக வலைதளங்களில் விமரிசனத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.