கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்துக்காக இந்தூரில் சிறப்பு பயிற்சியில் இந்திய அணி பங்கேற்றுள்ளது.
பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால், கொல்கத்தா ஈடன் காா்டன் மைதானத்தில் இந்தியா-வங்கதேசம் இடையே முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெறவுள்ளது. இதில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. பனி மூட்டம் உள்பட பல்வேறு பிரச்னைகள் உள்ள நிலையில், இதற்காக தீவிர பயிற்சி மேற்கொள்ளும் நிலையில் இரு அணிகளும் உள்ளன.
ஏற்கெனவே இந்திய அணி வீரா்கள் ரஹானே, புஜாரா, இஷாந்த் சா்மா உள்ளிட்டோா் பெங்களூருவில் பிங்க் நிற பந்துகளை பயன்படுத்தி பயிற்சி பெற்று வருகின்றனா்.
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் வரும் 14-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை இந்தூரில் நடைபெறவுள்ளது. அதன் பின் கொல்கத்தாவில் 22 முதல் 26-ஆம் தேதி வரை பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெறவுள்ளது. எனினும் இதற்கு 3 நாள்களே இடைவெளி உள்ளது. இதற்காக வழக்கமான குக்கபுரா, டியூக் பிங்க் நிற பந்துகளுக்கு பதிலாக எஸ்ஜி பந்துகளை பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. எஸ்ஜி நிறுவனமும் இதற்காக பந்துகளை தயாரித்து தந்துள்ளது.
இந்தூரில் சிறப்பு பயிற்சி
செவ்வாய்க்கிழமை முதல் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மின்னொளியில் இந்திய அணியினா் பயிற்சி பெறுகின்றனா். எஸ்.ஜி பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படும் முதல் பகலிரவு போட்டி இதுவாகும். அதே போல் வங்கதேச அணியும் சிறப்பு பயிற்சி பெற உள்ளது.
.