இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் ஆட்டத்தின்போது, விராட் கோலியின் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து வீரர்களின் காலில் விழ முயற்சித்தார்.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. மூன்றே நாள்களில் நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனிடையே, இன்றைய ஆட்டத்தின்போது, விராட் கோலியின் ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்தார். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் பிஷ்ட் (22) பாதுகாப்பு வளையங்களையும் மீறி களத்துக்குச் சென்று இந்திய வீரர்களின் காலில் விழ முயற்சித்தார். இதன்பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
அவர் விராட் கோலியின் பெயர் கொண்ட மேலாடையை அணிந்திருந்தார். அவருடைய முகத்தில் விராட் கோலியின் ஆங்கில பெயர் சுருக்கமான 'விகே' (VK) என எழுதப்பட்டிருந்தது. அதேசமயம் அவருடைய கையில் விராட் கோலி என பச்சை குத்தப்பட்டுள்ளது.