செங்கல்பட்டு: பஞ்சாப் மாநிலம் கரியால் நகரில் நடைபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையேயான தேசிய வில்வித்தை போட்டியில் மாமல்லபுரத்தைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
மாமல்லபுரத்தைச் சேர்ந்த விவசாயி பன்னீர் செல்வம்}கலையரசி தம்பதியரின் மகள் பூர்விகா (12) கேளம்பாக்கத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். வில்வித்தையில் ஆர்வம் ஏற்பட்டு அதை முறையாகக் கற்று மாநில அளவில் இதுவரை பல போட்டிகளில் பங்கேற்று 10 தங்கப் பதக்கம் , 2 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதனிடையே தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டி பஞ்சாப் மாநிலம் கரியால் நகரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் வில்வித்தைப் போட்டியில் பங்கேற்ற மாணவி பூர்விகா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பிலும் மாமல்லபுரத்தில் உள்ள பல்வேறு அமைப்பினரும் விளையாட்டு குழுவினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.