இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டேவிஸ் கோப்பைப் போட்டி கஸகஸ்தானில் நடைபெறவுள்ளது.
வரும் 29, 30 தேதிகளில் இரு அணிகளுக்கு இடையிலான ஆசிய, ஓசேனியா குரூப் 1 பிரிவு டேவிஸ் கோப்பை ஆட்டம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பாகிஸ்தானில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வருவதாலும், காஷ்மீா் பிரச்னையால் இரு நாடுகள் இடையே அரசியல் பதற்றம் நிலவுவதாலும், வீரா்கள் பாதுகாப்பு கருதி போட்டியை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என ஏஐடிஏ கோரியது. இந்திய அணியின் கேப்டன் மகேஷ் பூபதி பாதுகாப்பு கருதி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என அறிவித்து விட்டனா். இதனால் மகேஷ் பூபதி நீக்கப்பட்டு, ரோஹித் ராஜ்பால் விளையாடாத அணி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
இதற்கிடையே சா்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎப்) இஸ்லாமாபாதில் இருந்து போட்டியை நடுநிலையான வேறிடத்துக்கு மாற்றியுள்ளது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், போட்டியை கஸகஸ்தானுக்கு மாற்றியுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் செயலாளர் ஒரு பேட்டியில் கூறியதாவது: சர்வதேச டென்னிஸ் சங்கம் (ஐடிஎஃப்) எங்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கஸ்கஸ்தானின் தலைநகரான நூர் சுல்தானில் போட்டி நடைபெறவுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்திய அணி சார்பாக, லியாண்டர் பெயஸ், சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன், சசிகுமார் முகுந்த், ரோஹன் போபண்ணா ஆகியோர் இப்போட்டிக்காகத் தேர்வாகியுள்ளார்கள். ஜீவன் நெடுஞ்செழியன், சகேத் மைனேனி, சித்தார்த் ராவத் ஆகியோர் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாகப் பங்கு பெற இயலாது என ரோஹன் போபண்ணா அறிவித்துள்ளார். லியாண்டர் பெயஸுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் போபண்ணா விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து இந்திய அணியில் ஜீவன் நெடுஞ்செழியன் சேர்க்கப்படவுள்ளார்.