ஐபிஎல் 2020 சீசனை முன்னிட்டு வீரா்கள் பரிமாற்றம் சமீபத்தில் முடிவடைந்தது. ஐபிஎல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களைப் பரிமாறிக் கொண்டன. மேலும் அணியிலிருந்து விடுவிக்க வேண்டிய வீரர்களின் பட்டியலையும் அணிகள் வெளியிட்டுள்ளன.
பெஹ்ரென்டார்ஃப் உள்ளிட்ட 10 வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்துள்ளது. மேலும், தில்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளைச் சேர்ந்த டிரெண்ட் போல்ட் மற்றும் தவல் குல்கர்ணியைத் தேர்வு செய்துள்ளது. இதற்கான காரணத்தை மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
இந்த வருடம் எங்களுக்கு வித்தியாசமான ஒன்று. காயங்கள் காரணமாக எங்களுக்குச் சில சவால்கள் ஏற்பட்டுள்ளன. ஹார்திக் பாண்டியா, பும்ரா, பெஹ்ரென்டார்ஃப் ஆகியோர் காயங்களால் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் வேகப்பந்துவீச்சுக் குழுவை வலுவாக்க வேண்டும் என்பதால் நிலைமையைக் கருத்தில் கொண்டு டிரெண்ட் போல்ட் மற்றும் தவல் குல்கர்ணியைத் தேர்வு செய்தோம் என்று கூறியுள்ளார்.
முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்குக் கடந்த மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. பும்ராவுக்கு அவரது கழுத்தின் கீழ்பகுதியில் முறிவு இருந்தது. இதனால் அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.