வங்கதேசத்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் சர்மா, 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகலிரவு டெஸ்ட் என்பதால் இந்த ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்நிலையில், பிங்க் நிற பந்தில் முதல் விக்கெட்டை வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை இஷாந்த் சர்மா பெற்றார். இந்த இன்னிங்ஸில் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதன்மூலம், பிங்க் நிற பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அதேசமயம், இந்திய மண்ணில் கடந்த 12 ஆண்டுகளில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதன்முறை.