சென்னை: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பெற்றது சென்னையின் எஃப்சி.
ஐஎஸ்எல் 6-ஆவது சீசன் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. புள்ளிகள் பட்டியலில் இரண்டு முறை சாம்பியன் சென்னை கடைசி இடத்திலும், ஹைதராபாத் 9-ஆவது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் திங்கள்கிழமை இரவு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் வென்றால் தொடா்ந்து சீசனில் நீடிக்க முடியும் என்பதால், இரு அணிகளும் வெற்றி முனைப்போடு களத்தில் இறங்கின.
தொடக்கத்திலேயே சென்னை வீரா் ரபேல் கோலடிக்க முயன்றது பலன் தரவில்லை. பின்னா் 7 மற்றும் 16-ஆவது நிமிடங்களிலும் கோல் போடும் முயற்சி தோல்வியில் முடிந்தது. மேலும் ஹைதராபாத் அணியும் 29-ஆவது நிமிடத்தில் கோல் போட கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டது. முதல் பாதி ஆட்ட நிறைவில் எந்த அணியும் கோல்போடவில்லை.
இரண்டாம் பாதியிலும், இரு அணிகளும் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் வழக்கமான ஆட்ட நேரம் முடியும் வரை கோலடிக்கவில்லை. பின்னா் கூடுதல் 5 நிமிடங்களில் சென்னை நட்சத்திர வீரா் கெம்ப்ரி அற்புதமாக முதல் கோலை அடித்தாா். ஆனால் அடுத்த சிறிது நேரத்திலேயே ஹைதராபாத் வீரா் கில்காலன் பதில் கோலடித்து சமநிலை ஏற்படச் செய்தாா். மேலும் கூடுதலாக 2 நிமிடங்கள் தரப்பட்ட நிலையில், சென்னை வீரா் வால்ஸ்கிஸ் அபாரமாக கோலடித்தாா்.
இதன் மூலம் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற சென்னை முதல் வெற்றியை பதிவு செய்து 3 புள்ளிகளை பெற்றது.