முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்டியா சிகிச்சை பெறுவதற்காக இங்கிலாந்துக்கு செல்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி 2018-இல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடியபோதும், ஹார்திக் பாண்டியா இங்கிலாந்தில் உள்ள மருத்துவ நிபுணரிடம் சிகிச்சை பெற்றார். இதனால், அவரிடமே மீண்டும் சிகிச்சை பெறுவதற்காக அவர் புதன்கிழமை இங்கிலாந்துக்கு புறப்படுகிறார்.
இதுகுறித்து, பிசிசிஐ மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில்,
"பாண்டியா முதுகுப் பிரச்னை காரணமாக இங்கிலாந்து மருத்துவ நிபுணரிடம் சிகிச்சை பெற்று வருகிறார். இதிலிருந்து மீண்டுவர பாண்டியா வெறும் மருந்துகள் மட்டும் உட்கொண்டால் போதுமா அல்லது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா என்பது குறித்து அந்த மருத்துவர் பாண்டியாவிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்ய வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக அந்த மருத்துவருடன் தொடர்பிலேயே இருப்பதால், அவருக்கு பாண்டியாவின் பிரச்னை குறித்து நன்றாகவே தெரியும். உலகக்கோப்பை தொடரின் போதும்கூட பாண்டியா அந்த மருத்துவரைச் சந்தித்து வந்தார்.
எந்தவொரு விளையாட்டு வீரரும் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருக்க மாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் எப்போதுமே ஏதாவது பிரச்னையை எதிர்கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுக்கு உதவ பிசியோ இருப்பார். அதன்பிறகு, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவர்கள் அது குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
தோனியை எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளுங்கள். கடந்த 12 வருடங்களாக அவர் தரையில்தான் படுத்து உறங்குகிறார். அதேசமயம் தொடர்ச்சியாக விளையாடியும் வருகிறார். இதுபோன்று, அந்தச் சூழலில் இருந்து வெளிவர மாற்று வழிகளை கண்டறிய வேண்டும்" என்றார்.