தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுபயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் நாளை தொடங்கவுள்ள முதல் டெஸ்டில் ரித்திமான் சாஹா விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என அறிவித்துள்ளார் விராட் கோலி. செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
முதல் டெஸ்டில் விக்கெட் கீப்பராக சாஹா செயல்படுவார். அவர் நல்ல உடற்தகுதியை அடைந்துவிட்டார். அவருடைய கீப்பிங் திறமைகளை அனைவரும் அறிவர். வாய்ப்புகள் கிடைத்தபோது தனது பேட்டிங் திறமைகளையும் வெளிப்படுத்தியுள்ளார். துரதிர்ஷ்டவசமாகக் காயம் காரணமாக அவர் வெளியில் இருந்தார். என்னைப் பொறுத்தவரை அவர் தான் உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். இந்திய ஆடுகளச் சூழலில் அவர் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராகச் செயல்படவுள்ளார் என்று கோலி கூறியுள்ளார்.
சாஹா, கடைசியாக தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி 2018-ல் விளையாடினார். காயம் காரணமாக அவர் இதர தொடர்களிலிருந்து விலகினார். இதற்குப் பிறகு விக்கெட் கீப்பராகச் செயல்பட்ட ரிஷப் பந்த், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் சதங்கள் எடுத்தார். எனினும் இந்திய ஆடுகளங்களில் சாஹா பொருத்தமான விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளது.