சென்னை: சமீபத்தில் நிறைவு பெற்ற டிஎன்பிஎல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் முடிந்த தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வென்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அதேசமயம் டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களைச் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இதுகுறித்த விசாரணையை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. டிஎன்பிஎல் போட்டிக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் உண்மையில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐயிடமிருந்து எவ்வித தகவலும் வரவில்லை என்றும் டிஎன்சிஏ சார்பில் முதலில் கூறப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து விசாரிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டது
இந்நிலையில் சமீபத்தில் நிறைவுபெற்ற டிஎன்பிஎல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் அமைக்கப்பட்ட குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது
டிஎன்பிஎல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது
டிஎன்பிஎல் நம்பகத்தன்மையை காக்க சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.