பந்துவீச்சாளர்களின் நெருக்கடியைச் சமாளித்த தெ.ஆ. பேட்ஸ்மேன்கள்: உணவு இடைவேளையின்போது தெ.ஆ. 153/4

3-ம் நாள் உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி, தனது முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.
பந்துவீச்சாளர்களின் நெருக்கடியைச் சமாளித்த தெ.ஆ. பேட்ஸ்மேன்கள்: உணவு இடைவேளையின்போது தெ.ஆ. 153/4

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் புதன்கிழமை விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 502 ரன்களுடன் டிக்ளோ் செய்தது. 2-ம் நாள் முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பில் 39 ரன்கள் எடுத்தது.

இன்று தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. அடிக்கடி பவுண்டரிகள் அடித்து நல்ல ஆரம்பத்துடன் இன்றைய தினத்தைத் தொடங்கினார்கள். ஆனால், இஷாந்த் சர்மா சிறப்பாக வீசி, பவுமாவை எல்பிடபிள்யூ முறையில் 18 ரன்களில் வீழ்த்தினார். இதன்பிறகு 6-ம் நிலை வீரராகக் களமிறங்கினார் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ். எல்கர் - டு பிளெஸ்ஸிஸ் ஆகிய இருவரும் சுழற்பந்துவீச்சை கவனமாகக் கையாண்டார்கள். நேற்று மூன்று விக்கெட்டுகள் விழுந்ததால் எளிதாக மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என்கிற இந்திய வீரர்களின் எண்ணத்தை அடியோடு மாற்றினார்கள். ஜடேஜா வீசிய 44-வது ஓவரில் எல்கர் இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 16 ரன்களை எடுத்தார். அவர் 112 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். மதிய உணவு இடைவேளை வரை இருவரையும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இருவருடைய பேட்டிங்கும் இந்த டெஸ்டுக்குப் புதிய திருப்பத்தைத் தந்துள்ளது. இந்திய அணி எளிதாக வெல்லும் என்கிற கணிப்பை மாற்றியுள்ளது.

3-ம் நாள் உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்க அணி, தனது முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்துள்ளது. எல்கர் 76, டு பிளெஸ்ஸிஸ் 48 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com