சிஎஸ்கே அணிக்குத்தான் முன்னுரிமை: தி ஹண்ட்ரெட் போட்டியில் பங்கேற்பதிலிருந்து விலகினார் ஹர்பஜன் சிங்!

இந்த சர்ச்சை தொடர்பான தன்னுடைய நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார் ஹர்பஜன் சிங். இதுகுறித்து ஒரு பேட்டியில்....
சிஎஸ்கே அணிக்குத்தான் முன்னுரிமை: தி ஹண்ட்ரெட் போட்டியில் பங்கேற்பதிலிருந்து விலகினார் ஹர்பஜன் சிங்!

ஐபிஎல் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 100 பந்துகள் கொண்ட தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் அறிமுகம் செய்துள்ளது. இந்த 100 பந்துகள் ஆட்டத்தில் வழக்கமான 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும். இதனால் டி20 போட்டிகளான ஐபிஎல், பிக் பாஷ், கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். ஆடவர், மகளிர் என இரு தரப்பினருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் தலா 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. 2003-ல் டிவெண்டி20 கப் என்கிற டி20 போட்டியை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது. அதன் அடுத்தக்கட்டமாக 100 பந்துகள் கொண்ட இப்போட்டி அடுத்த வருடம் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தி ஹண்ட்ரெட் போட்டியின் வரைவுப் பட்டியலில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் பதிவு செய்துள்ளார். அவர் கடைசியாக 2016 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ளார். தி ஹண்ட்ரெட் போட்டியில் தன்னுடைய அடிப்படை விலையாக 1 லட்சம் பவுண்டுகளை (1 லட்சத்து 24 ஆயிரம் டாலர்கள்) நிர்ணயித்துள்ளார் ஹர்பஜன். அக்டோபர் 20 அன்று லண்டனில் இறுதி வரைவுப் பட்டியல் வெளியிடப்படும். ஒவ்வொரு அணியிலும் 3 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெறலாம்.

எனினும் 39 வயது ஹர்பஜன் சிங் அப்போட்டியில் இடம்பெற வேண்டுமென்றால் பிசிசிஐயின் அனுமதியைப் பெறவேண்டும். பிசிசிஐ விதிமுறைகளின்படி ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டுமே வெளிநாட்டுப் போட்டிகளில் விளையாட முடியும். இதனால் ஹர்பஜன் சிங் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற யுவ்ராஜ் சிங், குளோபல் டி20 லீக் போட்டியில் விளையாடினார். 

தற்போதைய நிலைமையில் ஹர்பஜன் சிங்கால் தி ஹண்ட்ரெட் வரைவுப் பட்டியலில் இடம்பெற முடியாது என பிசிசிஐ கூறியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது: வரைவுப் பட்டியலில் அவர் பெயர் எப்படி இடம்பெறும்? அவர் இப்போதும் இந்திய அணி வீரராகவே உள்ளார். பிசிசிஐயின் அனுமதியில்லாமல் அவரால் வரைவுப் பட்டியலில் இடம்பெறமுடியாது. வெளிநாட்டுப் போட்டிகளில் பங்குபெற ஓய்வுக்குப் பிறகும் பிசிசிஐயிடம் வீரர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில் இந்த சர்ச்சை தொடர்பான தன்னுடைய நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார் ஹர்பஜன் சிங். இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

எனக்கு சென்னை சூப்பர் கிங்ஸும் ஐபிஎல் போட்டியும் தான் முதன்மையானவை. இரண்டு இறுதிச்சுற்று ஆட்டங்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு நல்லதாக அமைந்துள்ளது. ஆகவே மீண்டுமொரு நல்ல சீஸன் அமையவேண்டும் என எதிர்பார்க்கிறேன். பிசிசிஐயின் விதிமுறைகளை மதிக்கிறேன். அவற்றை நான் ஒரு போதும் மீறமாட்டேன். அதனால் தி ஹண்ட்ரெட் போட்டியின் வரைவுப் பட்டியலில் இருந்து என் பெயரைத் திரும்பப் பெறுவதாக இருந்தாலும். எனவே என் பெயரை அதிலிருந்து திரும்பப் பெறுகிறேன். 

எந்த விதிமுறையும் மீற நான் விரும்பவில்லை. ஆனால், இந்தப் போட்டியின் அமைப்பு என்னைக் கவர்கிறது. எப்போது விதிமுறை எனக்கு அனுமதி அளிக்கிறதோ அப்போது தி ஹண்ட்ரெட் போட்டியில் நிச்சயம் விளையாடுவேன் என்று கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com