தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக துவக்க வீரர்கள் மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோஹித் ஷர்மா 176 ரன்களும் குவித்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எல்கர் 160 ரன்களும், டி காக் 111 ரன்களும் சேர்த்தனர். அபாரமாக பந்துவீசிய அஸ்வின் 7 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இந்நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணியில் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா மீண்டும் சதமடித்து 127 ரன்கள் விளாசினார், புஜாரா 81 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
5-ஆம் நாள் ஆட்டத்தில் 395 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். எனவே 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்று 1-0 என தொடரில் முன்னிலைப் பெற்றது.