வதோதரா: இருபது வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் விளையாடும் ஒரே பெண் என்ற சாதனையை இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் புதனன்று நிகழ்த்தியுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ். இவர் கடந்த 26.06.1999 அன்று ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.
தற்போது தென் ஆபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. குஜராத் மாநிலம் வதோதராவில் புதனன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக களமிறங்கிய போது அவர் தனது ஒரு நாள் போட்டி வரலாற்றில் 20 ஆண்டுகள் 150 நாட்களை நிறைவு செய்தார். அத்துடன் அவர் இந்த போட்டியில் அவுட் ஆகாமல் 11 ரணங்களை எடுத்தார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதேசமயம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரு தசாப்தங்களைத் தாண்டி விளையாடி வரும் ஒரே பெண்ணும் இவர் மட்டும்தான். முன்னதாக மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக போட்டிகள் (204) விளையாடியவர் என்ற சாதனையும் இவர் வசம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.