புணேவில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது.
இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து நேராக ரோஹித் சர்மா பக்கம் ஓடிவந்தார். முத்துசாமி ஆட்டமிழந்து பிலாண்டர் ஆடுகளத்துக்குள் நுழைந்தபோது இச்சம்பவம் நடைபெற்றது. ஸ்லிப் பகுதியில் நின்ற ரோஹித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கினார் அந்த ரசிகர். பிறகு காவலர்கள் அந்த ரசிகரை அழைத்துச் சென்றார்கள்.
வர்ணனையில் இதைக் கண்ட முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையாக விமரிசனம் செய்தார். அவர் கூறியதாவது: இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்குக் காரணம், பாதுகாவலர்கள் ரசிகர்கள் பக்கம் கவனம் செலுத்தாமல் ஆட்டத்தைக் கவனிப்பதுதான். இந்தியாவில் எப்போதும் இப்பிரச்னை உள்ளது. கிரிக்கெட் ஆட்டத்தை இலவசமாகப் பார்ப்பதற்காக பாதுகாவலர்கள் அங்கு இல்லை. இதுபோன்று அத்துமீறி நுழைபவர்களைத் தடுப்பதற்காகத்தான் அவர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
பாதுகாவலர்களின் பக்கம் கேமராவைத் திருப்பி, அவர்கள் ஆட்டத்தைப் பார்க்கிறார்களா அல்லது ரசிகர்களைக் கவனிக்கிறார்களா எனக் கண்காணிக்கவேண்டும். இதுபோன்று அத்துமீறி நுழையும் வீரர்களால் வீரர்களுக்கு ஆபத்து நேரலாம். இதுபோல முன்பு நடைபெற்றுள்ளது. பிறகு ஏன் இவ்வாறு அலட்சியமாக இருக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான தொடரில் இதுபோன்று 3-வது முறையாக ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டிலும் மொஹலியில் நடைபெற்ற டி20 ஆட்டத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.