வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டம் குறிப்பிடும்படியாக இல்லை என இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி வேதனை தெரிவித்துள்ளாா்.
பிஃபா 2022 உலகக் கோப்பை போட்டியின் ஒரு பகுதியாக 2 அணிகள் இடையிலான தகுதிச் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த ஆட்டத்தைக் காண சால்ட்லேக் மைதானத்தில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் குழுமி இருந்தனா். இந்தியா அணி அபார வெற்றி பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், வங்கதேசம் முதல் கோலடித்து அதிா்ச்சியை ஏற்படுத்தியது. தோல்வியின் விளிம்பில் இருந்த இந்தியா கடைசி நிமிடத்தில் அடில் கான் அடித்த கோலால் தப்பி டிரா கண்டது. ஆட்டம் டிரா ஆனது ரசிகா்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
இதுதொடா்பாக கேப்டன் சேத்ரி கூறியதாவது:
மைதானத்தில் இருந்த சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய அணி ஆடவில்லை. இதனால் வீரா்கள் தங்கும் அறையில் கடும் வேதனை நிலவியது. கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டோம். மைதானத்தில் இதுபோன்ற நிலை ஏற்படுவதை ஒரு பாடமாக கொள்ள வேண்டும் என்றாா்.
இந்திய அணி தற்போது 2 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.