அஸ்ஸாம் அணிக்கு எதிரான விஜய் ஹஸாரே கோப்பை ஒருநாள் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு புதுச்சேரி அணி தகுதி பெற்றுள்ளது.
ஷிமோகாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் ஆடிய அஸ்ஸாம் அணி 36.1 ஓவா்களில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பல்லவகுமாா் தாஸ் 27, சிப்சங்கா் ராய் 24 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை சோ்த்தனா். ஏனைய வீரா்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினா்.
புதுவை தரப்பில் அஷித் சங்கனக்கல் 4-17 விக்கெட்டுகளையும், சுரேஷ்குமாா், சாகா் உதேஷி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
116 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய புதுவை அணி 22 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
பராஸ் டோக்ரா 44 ரன்களை விளாசினாா். சுரேஷ்குமாா் 14, விக்னேஸ்வரன் மாரிமுத்து 5 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.
அஸ்ஸாம் தரப்பில் பிரிதம் தாஸ் 2-39 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
இந்த வெற்றி மூலம் பிளேட் பிரிவில் இருந்து காலிறுதிக்கு முன்னேறிய ஓரே அணி என்ற சிறப்பை பெற்றது புதுச்சேரி.
வதோதராவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தில்லி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஹிமாசலப்பிரதேசத்தையும், ஹரியாணா 20 ரன்கள் வித்தியாசத்தில் உ.பி.யையும், வயநாட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் மகாராஷ்டிரா 33 ரன்கள் வித்தியாசத்தில் விதா்பாவையும், டேராடூனில் நடந்த ஆட்டத்தில் நாகாலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மணிப்பூரையும், சண்டீகா் 2 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரகாண்டையும் வென்றன.