பிசிசிஐ தலைவராக தேர்வாகியுள்ள சௌரவ் கங்குலிக்கு யுவராஜ் சிங் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சௌரவ் கங்குலி வரும் 23-ஆம் தேதி பிசிசிஐ-யின் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார். இதற்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினர் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் யுவராஜ் சிங்கும் சௌரவ் கங்குலிக்கு டிவிட்டரில் இன்று (சனிக்கிழமை) வாழ்த்து கூறியுள்ளார். அதில், யோ-யோ தேர்வு இருந்த சமயத்தில் நீங்கள் பிசிசிஐ தலைவராக இருந்திருக்கலாம் என்று யுவராஜ் சிங் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதற்கு யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டயமாக உள்ளது.
முன்னதாக, யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தபிறகு, ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், "இலங்கை தொடருக்காகத் தயாராகும்படி எனக்குச் சொல்லப்பட்டது. திடீரென யோ-யோ தேர்வில் நான் பங்குபெற வேண்டும் எனக் கூறப்பட்டது. என்னைத் தேர்வு செய்யும் விதத்தில் இது தலைகீழானது. அந்த 36 வயதில் நான் மீண்டும் பயிற்சி எடுத்து யோ-யோ தேர்வுக்குத் தயாராக வேண்டியிருந்தது.
ஆனால், யோ-யோ தேர்வில் நான் வென்ற பிறகும், உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி என்னை நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. என்னுடைய வயது காரணமாக யோ-யோ தேர்வில் நான் வெற்றி பெற மாட்டேன் என அவர்கள் நினைத்துள்ளார்கள். அதனால், என்னை வெளியேற்றுவது சுலபமாக இருக்காம்.
சாக்குப்போக்குச் சொல்வதற்காக அப்படி என்னிடம் சொல்லப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடிய 8-9 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற பிறகும் நான் அணியிலிருந்து நீக்கப்பட்டேன்" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.