இன்று பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்: 39-ஆவது தலைவராகிறார் கங்குலி: சிஓஏ பதவிக்காலம் நிறைவு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை மும்பையில் நடைபெறுகிறது. இதில் 39-ஆவது
இன்று பிசிசிஐ ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்: 39-ஆவது தலைவராகிறார் கங்குலி: சிஓஏ பதவிக்காலம் நிறைவு


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை மும்பையில் நடைபெறுகிறது. இதில் 39-ஆவது தலைவராகிறார் செளரவ் கங்குலி. மேலும் இக்கூட்டத்துடன் கிரிக்கெட் நிர்வாகக் குழு (சிஓஏ)வின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.
ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார் எழுந்ததை அடுத்து, பிசிசிஐ செயல்பாடுகளை வெளிப்படையாக நடத்தவும், நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், முன்னாள் தலைமை கணக்காயர் வினோத் ராய், மகளிரணி முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோர் கொண்ட கிரிக்கெட் நிர்வாகக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.
கடந்த 2017 முதல் 33 மாதங்கள் சிஓஏ தரப்பு பிசிசிஐ நிர்வாகத்தை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தல் அக்டோவர் 23-ஆம் தேதி நடைபெறும் என சிஓஏ அறிவித்தது. மேலும் அனைத்து மாநில சங்கங்களும் புதிய சட்டவரையறையை ஏற்று நிர்வாகிகள் தேர்தலை நடத்தின. விதிகளை பின்பற்றவில்லை எனக்கூறி தமிழகம் உள்பட சில மாநிலங்களுக்கு தேர்தலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14-ஆம் தேதி மனுத் தாக்கல் செய்ய இறுதிநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி மட்டுமே மனு செய்திருந்தார். அவர் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷா, துணைத் தலைவர் பதவிக்கு உத்தரகாண்டின் மஹிம் வர்மா, பொருளாளர் பதவிக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகுர் சகோதரர் அருண் துமல், இணைச் செயலர் பதவிக்கு கேரளத்தின் ஜெயேஷ் ஜார்ஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவர் பதவியை கங்குலி ஏற்கிறார். இதனால் சிஓஏ வின் பதவிக்காலம் உடனடியாக நிறைவுக்கு வருகிறது.
10 மாதங்களே தலைவர் பொறுப்பில் கங்குலி பதவி வகிப்பார். நிர்வாகத்தை சீரமைப்பது, இரட்டை ஆதாய பதவி விவகாரம், கிரிக்கெட் ஆலோசனைக் குழு, தேசிய தேர்வுக் குழு, முதல் தர கிரிக்கெட்டை செம்மைப்படுத்துவது, மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம், பகலிரவு டெஸ்ட் ஆட்டம், நிரந்தர டெஸ்ட் மையங்கள் போன்றவை கங்குலி முன் உள்ள முக்கிய பிரச்னைகளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com