ஆஸ்திரேலியாவின் கேன்பெராவில் இலங்கை அணிக்கும் (ஆஸ்திரேலிய) பிரதமர் லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 ஆட்டம் இன்று நடைபெற்றது.
முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய பிரதமர் லெவன் அணி, 19.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆட்டத்தின்போது ஆச்சர்யமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. இலங்கை அணியின் இன்னிங்ஸில் 16-வது ஓவரில் ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன், வாட்டர் பாய் பணியைச் செய்து அனைவரையும் அசத்தினார். இந்த ஆட்டத்தைக் காண வந்திருந்த அவர், உள்ளூர் அணியின் தொப்பியை அணிந்துகொண்டு குளிர்பானங்களை எடுத்துகொண்டு ஆஸ்திரேலிய வீரர்களிடம் சென்றார். கிறிஸ் லின், ஜேசன் சங்கா ஆகிய வீரர்களுக்குக் குளிர்பானங்களை வழங்கி பிறகு தனது பணியை முடித்துக்கொண்டு அனைவருக்கும் வாழ்த்துகளைக் கூறிக்கொண்டு மீண்டும் மைதானத்துக்குத் திரும்பினார். பிரதமரின் இந்தச் செயலுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள்.