இரட்டை ஆதாயப் பதவி விவகாரம் தொடர்பாக வரும் நவம்பர் 12 அன்று நேரில் ஆஜராகுமாறு முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநருமான ராகுல் டிராவிட்டுக்கு பிசிசிஐ நெறிமுறைகள் அலுவலர் டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பினார்.
ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ராகுல் டிராவிட் துணை தலைவராக உள்ளார். இந்நிலையில் அவரை பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பிசிசிஐ நியமித்தது. இது இரட்டை ஆதாயப் பதவி வகிப்பதாகும் என மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா புகார் செய்தார். புதிய பிசிசிஐ சட்டவரையறையின்படி ஒருவர் ஒரு பதவி தான் வகிக்க வேண்டும், இல்லையென்றால் அது ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வரம்பில் வரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுதொடர்பாக எழுத்துபூர்வமாகப் பதில் தருமாறு டிராவிட்டுக்கு பிசிசிஐ நெறிமுறைகள் அலுவலர் டி.கே. ஜெயின் அறிவுறுத்தியிருந்தார். இரட்டை ஆதாயப் பதவி விவகாரம் தொடர்பாக செப். 26-ல் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து தான் நீண்ட நாள் விடுப்பில் உள்ளேன். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என டிராவிட் தனது பதிலில் கூறியிருந்தார். இந்நிலையில் இரட்டை ஆதாயப் பதவி விவகாரம் தொடர்பாக வரும் நவம்பர் 12 அன்று நேரில் ஆஜராகுமாறு டிராவிட்டுக்கு டி.கே.ஜெயின் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.