இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி ஐமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபைனா பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஹனுமா விஹாரி 225 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 111 ரன்கள் குவித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது முதல் சதமாகும். கேப்டன் விராட் கோலி 163 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் சேர்த்தார்.
துவக்க வீரர் மயங்க் அகர்வால் 55 ரன்கள் எடுத்தார். இஷாந்த் ஷர்மா 80 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் சேர்த்தார். இது டெஸ்ட் போட்டிகளில் இஷாந்தின் முதல் அரைசதமாகும். மே.இ.தீவுகள் தரப்பில் கேப்டன் ஹோல்டர் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். கார்ன்வால் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அபாரமாக பந்துவீசிய பும்ரா 'ஹாட்ரிக்' உடன் கூடிய 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி 1 விக்கெட் எடுத்தார்.
இதனால் மே.இ.தீவுகள் அணி இந்திய அணியை விட 329 ரன்கள் பின்தங்கியுள்ளது.