தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய ஏ அணி வென்றுள்ளது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3-வது அதிகாரபூர்வமற்ற ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 30 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. கிளாசென் 21 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார்.
சற்று கடினமான இலக்கை இந்திய ஏ அணியினர் நன்கு எதிர்கொண்டார்கள். தொடக்க வீரர் இஷான் கிஷன் 40 ரன்கள் எடுத்தார். கேப்டன் மணீஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தால் இந்திய ஏ அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமானார். 59 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் ஷிவம் டுபே, 28 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து இந்திய ஏ அணி சிரமம் இன்றி வெற்றி பெற உதவினார். இதனால் இந்திய ஏ அணி 27.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து 3-வது ஆட்டத்தை வென்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய ஏ அணி, 3-0 என முன்னிலை பெற்றுள்ளது.