மூன்று நாள்களில் இரு மிகச்சிறந்த வீரர்கள் யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார்கள். மீதமுள்ள ஒரு சாம்பியனாவது ரசிகர்களுக்கு நம்பிக்கை தரவேண்டும் அல்லவா!
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ரஃபேல் நடால்.
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் 6-4, 7-5, 6-2 என்கிற நேர் செட்களில் டிகோ ஸ்வார்ட்ஸ்மேனைத் தோற்கடித்துள்ளார் நடால். அரையிறுதியில் இத்தாலியின் 23 வயது மாட்டோ பெர்ரெட்டினியைச் சந்திக்கவுள்ளார். இன்னும் இரு வெற்றிகள் பெற்றால் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுவிடுவார் நடால். இதன்மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் உள்ள ஃபெடரரின் சாதனைக்கு அருகில் நெருங்குவார்.
ஞாயிறன்று நடைபெறவுள்ள யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றை வெல்லும் வீரருக்கு ரூ. 27.66 கோடி பரிசுத்தொகை கிடைக்கும்.