பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அப்துல் காதிர் (63) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார்.
கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் பாக். அணியில் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்த அப்துல் காதிர் லெக் ஸ்பின்னர் ஆவார். மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசி எதிரணிகளுக்கு சிம்மசொப்பனாக திகழ்ந்தவர்.
மொத்தம் 67 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் ஆட்டங்களில் ஆடி 368 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியவர். டெஸ்ட் ஆட்டங்களில் 9-56 விக்கெட் வீழ்த்தியது இவரது அதிகபட்ச சாதனையாகும். 16 வயதான சச்சின் டெண்டுல்கர் ஒரு காட்சிப் போட்டியில் அப்துல் காதிரின் பந்துவீச்சில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசியது மறக்க முடியாத நிகழ்வாகும். கடந்த 2009-இல் தேர்வுக் குழு தலைவராக இருந்த காதிர் தேர்வு செய்த பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.