மாநில கிரிக்கெட் சங்கங்கள் தங்கள் நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசத்தை 14-ஆம் தேதியில் இருந்து 28-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது பிசிசிஐ சிஓஏ.
நீதிபதி லோதா குழு பரிந்துரைகளின்படியும், உச்சநீதிமன்றம் அனுமதித்த புதிய சட்டவரையறையின்படியும், பிசிசிஐக்கு வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற வேண்டும்.
இந்நிலையில் சிஓஏ தலைவர் வினோத் ராய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேர்தல் பிரச்னை குறித்து முழுமையாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், செப்.14-ஆம் தேதியை வரும் 28-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். அதற்கு மேல் கண்டிப்பாக அவகாசம் தரப்படாது. அக்டோபர் 22-ஆம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலை நடத்தவும் அதற்கு 21 நாள்கள் முன்னதாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் வேண்டும்.
தேசிய தேர்தலில் பங்கேற்க மாநில சங்கங்கள் தங்கள் பிரதிநிதிகள் பெயர்களை 28-ஆம் தேதிக்குள் பிசிசிஐக்கு தெரிவிக்க வேண்டும். அக். 22-ஆம் தேதி தேர்தலில் எந்த மாறுதலும் இல்லை.
புதிய வரையறைக்கு ஒப்புதல் தெரிவிக்கும் கடிதம், தேர்தல் அதிகாரி நியமனம், தேர்தல் நடத்த அறிவிப்பு, போன்ற நடைமுறைகளை 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.