யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸுடன் மோதுகிறார் கனடாவின் இளம் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்கு.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் ஒன்றான இதில் வெள்ளிக்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் உக்ரைனின் எலினா விட்டோலினாவை எளிதில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
24-ஆவது பட்டம் வெல்ல தீவிரம்: மார்கரட் கோர்ட்டின் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை இந்த முறை சமன் செய்யும் தீவிரத்தில் உள்ளார் செரீனா.
பியான்கா ஆன்ட்ரிஸ்கு: கனடாவின் 19 வயது வீராங்கனை பியான்கா தனது கனவு ஓட்டத்தை தொடருகிறார். அரையிறுதிச் சுற்றில் பெலின்டா பென்கிக்கை 7-6, 7-5 என்ற நேர் செட்களில் போராடி வென்றார் பியான்கா. கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் 2-ஆவது வீராங்கனை பியான்கா ஆவார். 2014 விம்பிள்டனில் கனடாவின் பெளச்ர்ட் தகுதி பெற்றிருந்தார்.
என்ன சொல்வது என்று தெரியவில்லை: இதுதொடர்பாக பியான்கா கூறுகையில்: இறுதிச் சுற்றில் செரீனாவுடன் மோதுவது நிஜமாகி விட்டது. இதுகுறித்து என்ன சொல்வது எனறே தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளாக கடுமையாக பாடுபட்டது பலன் தந்துள்ளது. எனது கனவு நனவாகி உள்ளது என்றார்.
மார்கரட் கோர்ட்டின் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை இந்த முறை சமன் செய்யும் தீவிரத்தில் உள்ளார் செரீனா.